தொழில் நஷ்டம்.. மனைவி, 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று நெல் வியாபாரி தற்கொலை
விழுப்புரம் அருகே நெல் வியாபாரி மனைவி மற்றும் 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நெல் வியாபாரி மனைவி மற்றும் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கைவல்லித்தெருவை சேர்ந்தவர் பாபு. 38 வயதான இவர் நெல் வாங்கி விற்கும் தொழில் செய்த வந்தார்.
இவருக்கு கவிதா என்ற மனைவியும் கீர்த்தி, கீர்த்தனா என்ற மகள்களும் உள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் பாபுவின் வீடு திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த எதிர்வீட்டில் வசிக்கும் அவரது உறவினர், கதவை திறந்து பார்த்தார். அப்போது பாபு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இதைக்கண்டு அவர் கூச்சலிட்டார். இதனைக் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தப் போது, பாபுவின் மனைவி மற்றும் 2 மகள்கள் விஷம் குடித்து இறந்த நிலையில் கட்டிலுக்கு கீழே கிடந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாபு தனது மனைவி மற்றும குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பின்னர் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நெல் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் பிரச்னை காரணமாக அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
நெல் வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.