மழையால் மகிழ்ச்சி அடைய முடியாத விவசாயிகள்.. நெற் பயிர்கள் சேதமடைந்ததால் வேதனை!
தென்காசி: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனராம்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை பெய்து வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயநிலங்களில் ஒருபுறம் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தென்காசி வட்டாரப் பகுதிகளான பண்பொழி, வடகரை, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலங்களில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக இன்னும் விளைந்த நெற்க்கதிர்களை அறுவடை செய்ய முடியாமலும், அறுவடை செய்த நெல் நீரில் சேதமடைந்துள்ளதாலும் அவற்றை காய வைத்தும் நெல்மூடைகளை நல்ல விலைக்கு விற்க முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு அறுவடைக்கு போதிய மழை இல்லாமல் நெற்பயிர்கள் வாடி பாதி போகம் தான் எடுத்தோம். இந்தாண்டு போதிய மழையில்லாமல் நெல்லை விளைய வைத்தும் தண்ணீர் இன்றி தவித்தோம். இப்போது அறுவடை செய்யும் நேரத்தில் மழைவந்து அதைக்கூட விற்பனை செய்ய முடியாமல் ஆக்கி விட்டதாக புலம்பினர். மேலும், ,அரசு இந்த பகுதியை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.