பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு.. சீறிப் பாயும் காளைகள்.. அடக்க காத்திருக்கும் இளைஞர்கள் !
பாலமேட்டில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர்.
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு 1600 மாடுபிடி வீரர்கள் மற்றும் 850 காளைகள் போட்டியில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டசபையில் சட்டம் இயற்றியது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழிலிலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து அவனியாபுரத்தில் கடந்த 5 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து முடிந்தன.

இந்நிலையில் பாலமேட்டில் உள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையட்டி வாடிவாசல் அலங்கரிப்பு, பார்வையாளர் மேடையமைப்பு, இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடந்தன.
மேலும் செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை மாடுபிடி வீரர்களுக்கான பதிவு நடந்தது. இதில் 850 காளைகளுக்கும், 1,607 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 1607 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு குறைபாடு காரணமாக 67 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஜல்லிக்கட்ட பாதுகாப்பு பணியில் தென்மண்டல காவல்துறை தலைவர் எஸ்.முருகன் தலைமையில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், 50-க்கும் மேற்பட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் உள்பட 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பாலமேட்டில் நீதிமன்றத் தடைக்கு முன்பு, ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டின்போது சுமார் 1 லட்சம் பேர் பார்வையாளர்களாக வந்துள்ளனர். இப்போது அனைத்துத் தரப்பினரும் ஆர்வமாக இருப்பதால், சுமார் 3 லட்சம் பேர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications