பழனி கோயிலுக்குள் வேறு மதத்தினருக்கு அனுமதியில்லை..அறநிலையத்துறை புதிய அறிவிப்பு
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயில் படிகளில் சூடம் ஏற்றக்கூடாது, லுங்கி, கைலி அணிந்து கோயிலுக்குள் வரக்கூடாது எனவும் அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடுதான் பழனி மலை. தரையிலிருந்து சுமார் 960 அடி உயரத்திலிருக்கும் இந்த மலையின் உச்சியில் முருகன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சிலையை போகர் எனும் சித்தர் உருவாக்கியதாகவும், இக்கோயில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகவும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் என மூன்று விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்களில் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். மற்ற நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் கோயிலை நிதானமாக சுற்றி பார்க்க முடியும் என ஓரளவு பக்தர்கள் வருகை தருவார்கள். எப்படி இருப்பினும் பக்தர்களின் வருகை இருந்துக்கொண்டே இருக்கும்.
இந்நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்னர் மாற்று மதத்தை சேர்ந்த இருவர் கோயிலுக்குள் வின்ச் ரயில் மூலம் நுழைய முயன்றுள்ளனர். இதனை பார்த்த கோயில் நிர்வாகத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பியுள்ளனர். இதனையடுத்து தற்போது கோயில் நிர்வாகம் சாப்பில் போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில், "இந்துக்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற சில அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கோயில் படிகளில் சூடம் ஏற்றக்கூடாது, லுங்கி, கைலி அணிந்து கோயிலுக்குள் வரக்கூடாது, கோயில் வளாகத்தில் டிரம் செட் வாசிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பாக இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இதுபோன்று மாற்று மதத்தினர் கோயிலுக்குள் நுழைய கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுண்டு. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications