உயிர் பிழைக்கப் போராடும் பன்னா இஸ்மாயில்- சந்திக்க அனுமதி கோரும் மனைவி
அத்வானி வருகையின் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட போலீஸ் பக்ருதீன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் வைத்து பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் கைதானார்கள்.
இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பன்னா இஸ்மாயில் படுகாயமடைந்தார். அவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இஸ்மாயிலை சென்னை அரசு பொது மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்துள்ளனர். அங்கு பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் குழுவினர் இரவு பகலாக கண்காணித்து தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டை ஆபரேஷன் செய்து வெளியே அகற்றும் நிலையில் தற்போது இஸ்மாயில் உடல்நிலை இல்லை. அதைத் தாங்கக்கூடிய அளவிற்கு இன்னும் அவரது உடல் தயாராகவில்லை. ஆபத்து கட்டத்தை இன்னும் தாண்டவில்லை. உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.
இஸ்மாயில் உயிர் பிழைத்தால்தான் தீவிரவாத கும்பலின் சதி செயல் திட்டம் பற்றிய முழு விவரம் தெரியும் என காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, இஸ்மாயில்உடல் நிலை குறித்து டாக்டர்கள் தரப்பில் கூறுகையில், சிகிச்சை பெறும் பன்னா இஸ்மாயில் தீவிரவாதி என்றாலும் மனித உயிர். ஒரு உயிரை காப்பாற்றுவதுதான் டாக்டர்களின் கடமை. அந்த அடிப்படையில்தான் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவர் பேசினால்தான் போலீசுக்கு பல உண்மைகள் தெரியவரும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.
தற்போது 45 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இன்னும் 2 நாட்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கிடையில் நோய் தொற்று வராமல் இருக்க வேண்டும். அதற்கான தடுப்பு சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. காய்ச்சல், நோய் தொற்று வரவில்லை என்றால் விரைவில் நல்ல முன்னேற்ற ஏற்படும்.
வயிற்றில் துப்பாக்கி குண்டு இருப்பதால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. குண்டை வெளியே எடுப்பது பற்றி இப்போது எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பன்னா இஸ்மாயிலை குணப்படுத்துவதற்குத்தான் எல்லா சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன என்றனர்.
உயர்நீதிமன்றத்தில் மனைவி மனு
இதற்கிடையே தனது கணவரைப் பார்க்க அனுமதி கோரி பன்னா இஸ்மாயிலின் மனைவி மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரியும், தனது கணவரைப் பார்க்க அனுமதிக்கக் கோரியும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்