கருணாநிதிக்கு சொந்த மகனே ஓட்டுப் போட மாட்டார்... பண்ருட்டியார் பேச்சு
அரியலூர்: திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த மகனே திமுகவுக்கு ஓட்டுப் போடத் தயாரில்லை. அந்த நிலைக்கு திமுகவைக் கொண்டு வந்து விட்டார் கருணாநிதி என்று பேசியுள்ளார் சமீபத்தில் அதிமுகவில் இணைந்த முன்னாள் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசி அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் அரியலூரில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

பண்ருட்டியார் பேசுகையில், நான் பல்வேறு கட்சிகளுக்கு சென்றிருந்தாலும் தற்போதுதான் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு வந்துள்ளேன்.
சமுதாயத்திற்காக பாடுபடுவதாக கூறுபவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. தாழ்த்தப்பட்டோருக்காக பாடுபடுகிறேன் என்று கூறும் திருமாவளவன், வன்னியர்களுக்காக பாடுபடுவதாக கூறி நம்மை ஏமாற்றி வரும் ராமதாஸ், சமுதாயத்திற்கு தொண்டு செய்ய வந்தவர்கள்.
அவர்கள் அரசியலுக்கு போகிறார்கள் என்றால் தங்களை வளர்த்துக்கொள்ள போகிறார்கள். இதனால், சமுதாயத்திற்கு எந்த நன்மையுமில்லை. சமுதாயத்தை வளர்க்க தாங்கள் பயன்படவேண்டும் என்பதை விட்டுவிட்டு தங்களை வளர்த்துக்கொள்ள சமுதாயம் பயன்பட வேண்டும் என கருதுகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அவரது சொந்த மகனே ஓட்டு போட தயாராக இல்லை. எல்லோரும் சேர்ந்து வளர்த்த இயக்கத்தை, தான் மட்டும் வளர வேண்டும் என்று தன்னை ஆளாக்கிக்கொன்டதன் விளைவே இது. அதனால் தான் இன்று தனது குடும்பத்திலேயே கருணாநிதிக்கு எதிரிகள் தோன்றிவிட்டார்கள்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஒரு சில மாநிலங்களில் தான் சற்று வலுவாக உள்ளது. இதேபோல். பா.ஜ.க. இந்தி பேசும் மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களில் வளர முடியாது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள கட்சி என்ற அந்தஸ்தை எந்த அரசியல் கட்சியும் பெற்றிருக்கவில்லை.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் கூட்டனி ஆட்சிதான் அமையும். ஜெயலலிதா பிரதமராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவளித்துள்ளார். எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications