அந்தோ மறைந்தாரே மேதகு அப்துல்கலாம்.. பண்ருட்டி வேல்முருகன் வேதனை
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தைத் தருகிறது.

நம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த வறுமை விரட்டிய போதும் அதைக் கண்டு துவண்டு போகாமல் பள்ளி பருவத்தில் வீடு வீடாக பேப்பர்கள் போட்டு குடும்ப சுமையை ஏற்றவர். அவர் படித்தது முழுவதும் தமிழ்வழிக் கல்விதான்..
பிறப்பால் இஸ்லாமியராக இறந்தாலும் அனைத்து மத உறவுகளையும் நேசித்தவர். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதனைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டி.யில் என கல்வி கற்ற பின்னர் நாட்டின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக்கு தம்மை ஒப்படைத்துக் கொண்டார்
உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய பொக்ரான்- 2 அணு ஆயுத சோதனையில் மிக முக்கியமாக பங்காற்றியவர்.. இந்த நாட்டின் உயரிய விருதுகளாள் சிறப்பிக்கப்பட்டவர்..
இந்த தேசத்தின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவி வகித்த காலத்திலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.. இந்த நாட்டின் 64 கோடி இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக விடிவெள்ளியாக திகழ்ந்தவர்.. அவரது 'கனவு காணுங்கள்" எனும் தாரக மந்திரம்தான் இளைஞர்களின் தாரக முழக்கமாக தேசிய கீதமாக இருக்கிறது...
தமிழ் மொழியை திருக்குறளை மிகவும் நேசித்தவர்.. தமது உரைகளில் நூல்களில் திருக்குறள்களை எப்போதும் மேற்கொள்காட்டியவர்... தமது குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தில் தூக்கு தண்டனை தொடர்பான கருணை மனுக்களை நிராகரிக்காமல் அவற்றின் மீது முடிவெடுக்காமல் வைத்திருந்த கருணையாளர்.. பதவியில் இல்லாத காலத்தில் தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்துகளை முன்னெடுத்த மரண தண்டனையை ஒழித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மனித நேயப் பற்றாளர்....
நாட்டின் நதிகளை இணைக்க விரும்பியவர்.... 2020ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசாக்குவோம் என்ற நம்பிக்கையோடு இயங்கியவர்.. அவர் நேசித்த மாணவர்கள் மத்தியிலேயே இன்று அவர் உயிர் பிரிந்துள்ளது.
நிறைவான வாழ்க்கை வாழ்ந்து இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஆழப்பதிந்து இன்று நம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்திருக்கிறார் மாபெரும் அறிவியல் மேதை அப்துல்கலாம்..
அறிவியல் மாமேதை மேதகு அப்துல்கலாம் அவர்களின் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலையும் அன்னாருக்கு எங்களது செம்மார்ந்த இறுதி வணக்கத்தையும் செலுத்துகிறோம்.. மேதகு அப்துல்கலாம் அவர்களது லட்சியங்களை நமது இளைய சமுதாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதுதான் அவருக்கு நாம் செலுத்துகிற உண்மையான இரங்கலாக இருக்கும் என்பதை நினைவில் கொண்டு அவரது வழியில் நம் பயணத்தைத் தொடர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications