அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோலோச்சிய "ஆச்சி" மனோரமா... வேல்முருகன் புகழாரம்
சென்னை: அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்தவர் ஆச்சி என்று செல்லமாக அழைக்கப்படு்ம் நடிகை மனோரமா என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்.
மனோரமா மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தமிழ்த் திரை உலகில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக கோலோச்சிய மூத்த நடிகை 'ஆச்சி' மனோரமா 78) அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமையன்று காலமானார் என்ற செய்தி துயரத்தைத் தருகிறது.
திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியில் பிறந்து 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் 'ஆச்சி' மனோரமா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 1,500க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் பன்முகத் திறமையைக் காட்டியவர் 'ஆச்சி' மனோரா. 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களையும் பாடியவர் 'ஆச்சி' மனோரமா.
தென்னிந்தியாவின் 5 முதல்வர்களுடன் இணைந்து நடித்த பெருமைக்குரியவர் 'ஆச்சி' மனோரமா. அதிக திரைப்படங்களில் நடித்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தவர் 'ஆச்சி' மனோரமா.
இளம் பிராயம் முதல் கடைசி வரை நாடகம், திரைப்படத்துறை ஆகியவற்றை தன் உயிர்மூச்சாக நேசித்த 'ஆச்சி' மனோரா முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமையன்று காலமாகிவிட்டார்.
நம்மை விட்டு 'ஆச்சி' மனோரமா பிரிந்துவிட்டாலும் அவர் நடித்த திரைப்படங்களும் கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா வரலாற்றிலும் தமிழர் வாழ்விலும் நம்முடன் பயணிக்கும்.
'ஆச்சி' மனோரமாவை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்த் திரை உலகத் தினருக்கும் எங்களது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.