தமிழர்களையும், தமிழ்நாட்டையும் அவமதிக்கும் அமேசான்... தமிழகத்தை விட்டு விரட்ட வேல்முருகன் அழைப்பு
சென்னை: தமிழக மக்களை திட்டமிட்டு மோசடி செய்கிறது அமேசான் நிறுவனம். தமிழர்களையும், தமிழ்நாட்டையும் ஏமாற்றி மோசடி செய்யும் இந்த நிறுவனத்தை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அமேசான் என்ற ஆன்லைன் விற்பனை நிறுவனம் தமிழகத்தில் செய்தித் தாள்களில் முழு பக்கம் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளது.

அதில் அக்டோபர் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை அமேசான் இணைய தளம் மூலமாக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தினம் தோறும் 1 கிலோ தங்கம் வெல்வதற்கான வாய்ப்பைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் அமேசான் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.amazon.in - ல் இந்த தங்கம் வெல்லுதல் தொடர்பான அறிவிப்பின் தொடக்கத்திலேயே, "Note: Residents of the State of TamilNadu are NOT eligible to enter or participate in this Contest" என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்தப் போட்டியில் தங்களது நிறுவன பணியாளர்கள், பணியாளர்களின் குடும்பத்தினர் பங்கேற்க தகுதி இல்லை எனக் குறிப்பிட்டு அந்த இடத்திலும் தமிழக குடிமக்களும் பங்கேற்க தகுதியில்லை (Residents of the state of Tamil Nadu) என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் செய்தித் தாள்களில் வெளியிட்ட விளம்பரங்களில் இந்த நிபந்தனையை திட்டமிட்டே அமேசான் நிறுவனம் மறைத்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துவிட்டு பின்னர் எதற்காக தமிழக ஊடகங்களில் அமேசான் விளம்பரம் செய்வது ஏன்?

தங்கம் வெல்லலாம் என்ற ஆசையை தமிழக மக்களிடத்தில் தூண்டிவிட்டு தங்களது இணையதளத்தின் மூலமாக பொருட்களை வாங்க வைத்து கடைசியாக உங்களுக்கு தங்கம் இல்லை என ஏமாற்றுவது என்கிற மோசடித்தனமான உள்நோக்கத்துடனேயே அமேசான் நிறுவனம் இந்த விளம்பரத்தை திட்டமிட்டே வெளியிட்டுள்ளது.
அமேசான் இணையதளத்தின் இந்த நூதன மோசடியில் சிக்கி தமிழர்கள் ஏமாற வேண்டாம். அத்துடன் இத்தகைய நூதன மோசடியில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்களை திட்டமிட்டு நூதன முறையில் ஏமாற்றுகிற இந்த அமேசான் இணையதள நிறுவனத்தை தமிழகத்தை விட்டு வெளியேற்ற தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications