தக்க சமயத்தில் உதவிய 'அம்மா'வுக்கு எப்படி நன்றி சொல்வேன்!: பரவை முனியம்மா
மதுரை: தக்க சமயத்தில் நிதியுதவி அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை என்று நடிகையும், பாடகியுமான பரவை முனியம்மா தெரிவித்துள்ளார்.
நடிகையும், பாடகியுமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் மதுரை-தேனி சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அவர் வறுமையில் வாடி வருகிறார். இதனால் மருத்துவ செலவை சமாளிக்கத் திணறினார். இது குறித்த தகவல் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சமும், மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் ரொக்கமும் அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்நிலையில் இது குறித்து பரவை முனியம்மா கூறுகையில்,
முதல்வர் ஜெயலலிதா செய்துள்ள உதவியை நான் உயிருள்ள வரை மறக்க மாட்டேன். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் படங்களில் நடிக்கவோ, திருவிழாக்களில் பாடவோ முடியவில்லை. வறுமையில் இருக்கையில் உதவி செய்துள்ள முதல்வருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்றார்.