பிரகாஷ் ஜவடேக்கருடன் முதல் ஆளாக பாரி வேந்தர் சந்திப்பு... கூட்டணி குறித்து பேச்சு!
சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து சென்னையில், ஜவடேக்கரை, இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், மீடியா மற்றும் கல்வி நிறுவன அதிபருமான பாரிவேந்தர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாஜகவின் தமிழகப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மீனம்பாக்கம் பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த ஜவடேக்கரை, இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், மீடியா மற்றும் கல்வி நிறுவன அதிபருமான பாரிவேந்தர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு இந்திய ஜனநாயக கட்சியும் இடம்பிடித்திருந்தது. இருப்பினும், போட்டியிட்ட பெரம்பலூர் மக்களவை தொகுதியில் கட்சி தலைவர் பாரிவேந்தர் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் சட்டசபை தேர்தலிலும், பாஜக கூட்டணியில் தொடருவதா அல்லது தனியாக போட்டியிடுவதா என்பது குறித்து பாரிவேந்தர் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. தாங்கள் விரும்பும் தொகுதிகளை பாஜக கொடுத்தால் அதனோடு கூட்டணி வைக்க பாரிவேந்தர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்துதான், இன்று ஜவடேக்கரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் பாரிவேந்தர்.












Click it and Unblock the Notifications