சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. 7 ஏக்கரில் அமையும் பிரம்மாண்ட பூங்கா.. அதுவும் கோயம்பேட்டில்
சென்னை: சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை மேலும் அழகுபடுத்திடும் வகையில் பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கரில் பிரம்மாண்டமான பூங்கா ஒன்றை அமைத்திட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு உள்ளது.
எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு இளைப்பாறும் இடங்களாக பூங்காக்கள் தான் உள்ளன. அதிலும் சென்னையில் உள்ள நிலவரத்தை பற்றி சொல்லவே வேண்டாம். எங்கு பார்த்தாலும் நெரிசல்..சாலைகளில் வாகன இரைச்சல் என எப்போதும் பரபரவென இயங்கிக் கொண்டு இருக்கும்.

மக்கள் வார இறுதி நாட்களிலும் காலை மாலை காற்றோட்டமாக நடைபயிற்சி செய்யவும் மக்கள் தேடும் முதல் இடமாக இருப்பது பூங்காக்களாகத்தான் இருக்கும். ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் பெண்கள், குழந்தைகள் போன்றவர்கள் காலையிலும் மாலையிலும் பூங்கக்களில் நடைபயிற்சியில் ஈடுபட்டு விட்டு அங்கேயே சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்வதை காண முடியும்.
இதனால் சென்னையில் உள்ள பூங்காக்களை அழகுப்படுத்தவும் மேம்படுத்தும் பணிகளையும் சென்னை மாநகாரட்சி அவ்வப்போது செய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கோயம்பேட்டில் 7 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பூங்கா ஒன்றை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
கோயம்பேடு என்றதுமே அனைவருக்குமே முதலில் நினைவுக்கு வருவது பேருந்துகள் தான். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதே கோயம்பேட்டில் உள்ள மார்கெட்டும் மக்களுக்கு மிகவும் பரிட்சயமானது.
21 ஏக்கரில் பரந்து விரிந்து இருக்கும் இந்த மார்க்கெட் 1996-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 4 ஆயிரம் கடைகள் உள்ளன. காய்கறிகள், பழங்கள், பூ மற்றும் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை இங்கு நடந்து வருகிறது. 24 மணி நேரமும் பிசியாக இந்த மார்க்கெட் காணப்படும்.
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை அழகுபடுத்தும் விதமாக பூ மார்க்கெட் வளாகத்தில் பிரம்மாண்ட பூங்கா ஒன்றை அமைக்க சென்னை பெருநகரட்சி வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. 7 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த பூங்கா அமைய இருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இந்த பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்கான இடம், ஜாக்கிங் செய்வதற்கான பாதை ,குழந்தைகள் விளையடுவதற்கான இடங்கள், செடிகள், மரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நவீன பூங்காவை அமைக்க சிஎம்.டிஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கோயம்பேடு மார்கெட் வளாகத்தில் தொழிலாளர்களின் வசதிக்காக அவசர சிகிச்சை பிரிவு மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கும் கோயம்பேட்டில் 7 ஏக்கரில் இந்த பூங்கா அமைக்கப்படும்பட்சத்தில் கோயம்பேடு சுற்றியுள்ள மக்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். அதுபோக கோயம்பேடு பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகள் கூட இளைப்பாற இந்த பூங்காக்களுக்கு வந்து விட்டு செல்ல வாய்ப்பு உள்ளது. எப்படியும் சென்னை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இந்த பூங்கா அமையும் என்று கோயம்பேடு பகுதி மக்கள் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications