டாப் டக்கர்.. சென்னையில் கிரிக்கெட், டென்னிஸ் மைதானம்.. ஈசிஆரில் சைக்கிள் பாதை! இத்தனை பூங்காக்களா?
சென்னை: கிரிக்கெட், டென்னிஸ் மைதானங்கள், பூங்காக்கள், உள் விளையாட்டு அரங்கம், சைக்கிள் பாதை என பல்வேறு திட்டங்கள் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் கீழ் அமைக்கப்பட இருக்கின்றன.
2023-24 ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவரும் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கும் சென்னையின் பல்வேறு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும், தியாகராய நகரில் உள்ள சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுவது தொடர்பாகவும் களஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், "தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு 22 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம்.

அந்த வகையில், அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று சென்னை, கோயம்பேடு பாலத்திற்கு கீழே இருக்கின்ற நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம்.
அதேபோல, தியாகராய நகர், சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று தனி மைதானம், டென்னிஸ் கோர்ட், பூங்கா வசதி, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
அதன் தொடர்ச்சியாக சென்னை, மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகிலுள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஒரு மினி விளையாட்டு மைதானத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வரலாற்றில் இதுபோன்று மேற்கொள்ளப்படுகின்ற மேம்பாட்டுப் பணிகள் உடனடியாக துரிதப்படுத்தக்கூடிய நடவடிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் தான் நடந்திருக்கின்றன. இவைகள் இல்லாமல் நம்முடைய சென்னை தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அமைத்தல், கடற்கரை பார்வதி நகர் முதல் எண்ணூர் கடற்கரை பகுதியில் 5 கி.மீ. நீளத்திற்கு அழகுபடுத்துதல் மற்றும் மகாபலிபுரத்தில் பேருந்து நிலையம் அமைத்தல் போன்ற பணிகளும் இதில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்கண்ட அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications