பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு .. அமைச்சர் சிவி சண்முகம்
பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோலில் விடுவிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது பரோல் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத்தொடரின் போதும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர்
உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார்.
மேலும் பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் அவர் கூறினார்.மேலும் நளினி பரோல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் சிவி சண்முகம் கூறினார்.