“நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?”... முதல் பரிசு ரூ. 5001.. பந்தயத்துக்கு நீங்க ரெடியா?
நெல்லை: கல்லிடைக் குறிச்சியில் பரோட்டோ பிரியர்களுக்கான வித்தியாசமானப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என நடனப் போட்டி ஒன்று நடைபெற்றது. தற்போது அதைப் போலவே, நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கல்லிடைக்குறிச்சியில் இயங்கி வரும் அசைவ ஹோட்டல் ஒன்று வித்தியாசமான சாப்பாட்டுப் போட்டியை அறிவித்துள்ளது.

அந்தப் போட்டிக்கு, 'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?' எனப் பெயரிடப்பட்டுள்ளது. வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சூரி, பரோட்டா போட்டி ஒன்றில் கலந்து கொண்டு நம்மை எல்லாம் நாக்கு ஊற வைப்பார். கடைசியில் பர்ஸ்ட் இருந்து போட்டியை ஆரம்பிக்கலாம் என இன்ப அதிர்ச்சியும் கொடுப்பார். இந்தக் காட்சி மூலம் பிரபலமானதாலேயே அவர் பேரோடு பரோட்டா ஒட்டிக் கொண்டது.
எனவே, இந்த பரோட்டோ சாப்பிடும் போட்டிக்கு, 'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு?' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். போட்டியின் விதிமுறை என்னவென்றால் போட்டியாளர் சாப்பிடும் பரோட்டாவிற்கு காசு கொடுத்து விட வேண்டும்.
ஆனால், இரவு 9 மணிக்குள் அதிக பரோட்டா சாப்பிடும் நபர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ. 5001 பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பரோட்டா பிரியர்களுக்கு நாம் சொல்ல விரும்புவதெல்லாம்... வேறென்ன 'ஆல் தி பெஸ்ட்' தான்!












Click it and Unblock the Notifications