பாலம் கட்டாவிட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்.. அரசுக்கு நல்லகண்ணு எச்சரிக்கை !
நெல்லை மாவட்டம் பணகுடியில் பாலம் அமைக்காவிட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் நான்குவழிச் சாலையில் முடங்கியுள்ள பாலப்பணியை மீண்டும் தொடங்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ப்பலிகள் நடக்கின்றன.
இதுவரை 1,400-க்கும் மேற்பட்ட விபத்துகளும், 300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு முடித்து வைத்தார். அப்போது பேசிய அவர், 'விரைவில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்' என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.