செங்கோட்டை பாசஞ்சர் ரயில் நேரத்தை மாற்ற பயணிகள் கோரிக்கை
நெல்லை: நெல்லை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு பயணிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரயில்வே பயணிகள் தெற்கு மண்டல ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நாங்கள் தினந்தோறும் வேலைக்காக நெல்லை மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செங்கோட்டை பயணிகள் ரயிலில் சென்று வருகிறோம். இதுபோல் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகளும் இதில் சென்று வருகின்றனர். தற்போது நெல்லை சந்திப்பிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் 9.15 மணிக்கு புறப்படுகிறது.
இதனால் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு நாங்கள் மிகவும் தாமதமாக காலை 10 மணிக்கு மேல் சென்று பணிகளை தொடங்க வேண்டியுள்ளது. செங்கோட்டை ரயில் இன்ஜின் கழற்றி மாற்றப்படுவதற்காக மட்டும் அரை மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக புறப்படுகிறது. இது காலை 9.45 மணி வரை கூட புறப்படுவதில்லை. இதன்காரணமாக அம்பாசமுத்திரம் செல்ல காலை 10.30 மணி ஆகிறது. இதனால் எங்கள் பணி பாதிக்கப்படுகிறது.
இதுபோல் மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து நெல்லை புறப்படும் ரயில் மாலை 4.30 மணிக்கு அம்பாசமுத்திரம் வந்து 5.15 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வருகிறது. இதன் காரணமாக அலுவலகங்களில் வேலை பார்ப்போர் இந்த ரயிலை பயன்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இதனால் பயணிகள் நலன் கருதி செங்கோட்டை செல்லும் ரயிலை காலை 8.15 மணிக்கு புறப்படும் வகையில் செய்தால் அம்பாசமுத்திரத்திற்கு காலை 9.15க்கு வரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு அம்பாசமுத்திரம் வந்து 6.15 நெல்லை சந்திப்புக்கு வரும்படி நேரத்தை மாற்ற வேண்டும். இந்த நேர மாற்றம் ஜூலை 1 ஆம்தேதி முதல் அமுல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.