இந்தியில் பாஸ்போர்ட்... கைவிடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்- ராமதாஸ் எச்சரிக்கை
பாஸ்போர்ட்டில் இந்தி இடம்பெறும் நிலையில் தமிழிலும் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: இந்தியில் பாஸ்போர்ட் வழங்கும்போது தமிழிலும் வழங்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு தேசிய மொழிக்கு இணையான தகுதியை பெற்றுள்ளன. இந்த நிலையில், குடிமக்கள் விரும்பினால் பாஸ்போர்ட்டில் குடிமக்கள் குறித்த ஆங்கில விவரங்களுக்கு அருகில் தங்கள் விவரங்களை இந்தியிலும் இடம் பெறச்செய்யலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
குடிமக்கள் விவரங்களை கூடுதலாக இந்தியில் இடம் பெறச்செய்யலாம் என்றால் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் அவற்றைப் பதிவு செய்வதில் எந்த சிரமமும் இருக்காது. எனவே, இரு மொழிகளில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்பது தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் நோக்கம் என்றால், 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில், குடிமக்கள் விரும்பும் மொழி மற்றும் ஆங்கிலத்தில் பாஸ்போர்ட் வழங்க முன்வர வேண்டும்.
மாறாக இந்தியில் மட்டும் கூடுதலாக பாஸ்போர்ட் வழங்குவது இந்தித் திணிப்பாகவே பார்க்கப்படும் என்பதால், அந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.