கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்... அலறி ஓடிய நர்சுகள்... நெல்லையில் பரபரப்பு
நெல்லை: தன்னைக் கடித்த பாம்புடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞரால் நெல்லை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலைக்கு முயன்ற சுவாதி கொலையாளி ராம்குமார் சிகிச்சைப் பெற்று வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பரபரப்புடனே காணப்பட்டது நெல்லை அரசு மருத்துவமனை. ராம்குமாரைக் காண செய்தியாளர்களோடு பொதுமக்கள் கூட்டம் அங்கு அதிகமாகக் காணப்பட்டது. நேற்று மதியம் நீதிபதி அனுமதியைத் தொடர்ந்து ஆம்புலன்சில் சென்னை அழைத்து வரப்பட்டார் ராம்குமார். இதனால் அங்கு நிலவிய பதற்றமான சூழல் முடிவுக்கு வந்தது.

ஆனால், நேற்றிரவு மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காரணம் ஆலங்குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னைக் கடித்த பாம்பை கவரில் போட்டு மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால், பணியில் இருந்த நர்சுக்கள் பயத்தில் உறைந்தனர்.
பாம்பு கடி பட்டவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மறந்தையை சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரியப்பன். விவசாயியான இவரது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாடுகளுக்கு தீனி போடுவதற்காக அருகில் உள்ள வைக்கோல் படைப்பையிலிருந்து அவர் வைக்கோலை எடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது படைப்பையிலிருந்த கட்டுவீரியன் பாம்பு மாரியப்பன் காலை கடித்தது. இதனால் அலறிய அவர் விஷம் ஏறமாலிருக்க பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமாக கட்டு போட்டார். பின்னர் அந்த பாம்பை அடித்து கொன்று பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்து கொண்டு அங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரமுள்ள நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் இரவில் வந்தார்.
தன்னை பாம்பு கடித்து விட்டதாக டாக்டர்களிடம் கூறிய அவர் பிளாஸ்டிக் பையில் கையோடு எடுத்து வந்த பாம்பை வெளியே எடுத்து போட்டார். இதை பார்த்த டாக்டர்கள், நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். நர்சுகள் அலறியபடியே வெளியே ஓட்டம் பிடித்தனர். பாம்புக்கு உயிர் இல்லை என்ற பிறகே அவர்கள் மிரட்சியுடன் உள்ளே வந்தனர்.
அதனைத் தொடர்ந்து உடனடியாக மாரியப்பனுக்கு விஷ முறிவுக்காக ஊசி போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications