வயிற்றுபோக்கு நோயாளியுடன் மருத்துவமனைக்கு விரைந்த '108' ஆம்புலன்சில் தீ: நோயாளி பலி
சென்னை: ஆம்புலன்ஸ் வாகனத்தில், தீ விபத்து ஏற்பட்டதால், அதில், சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நோயாளி ஒருவர், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் இறந்தார்.
மீஞ்சூர் அடுத்த, வழுதிகைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (70). அவர், கடந்த சில தினங்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு, அவர் நிலைமை மேலும் மோசமாகவே, '108' ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், பொன்நகர் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தின் முன்பக்கம், பேட்டரியில் திடிரென தீப்பிடித்துள்ளது.
உடனடியாக, வாகனத்தை அங்கேயே நிறுத்திய ஓட்டுனர் மற்றும் மருத்துவக் குழுவினர், நோயாளி மற்றும் வாகனத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவற்றை இறக்கிவிட்டு, தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரும், அங்கு சென்று தீயை அணைத்தனர்.
இதனிடையே மாற்று வாகனத்தை வரவழைக்க தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கோவிந்தசாமியின் நிலை மேலும் மோசமானது. மருத்துவக் குழுவினர், அவருக்கு அங்கேயே சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்தார். ஆம்புலன்சில் அழைத்துச் சென்றும், கோவிந்தசாமியின் கெட்ட நேரம் அவரை விடவில்லை போலும் என்று ஊர்க்காரர்கள் பேசிக்கொள்கின்றனர்.