வலிப்பு வந்து துடித்த குழந்தை.. அலட்சியம் காட்டிய மயிலாடுதுறை அரசு மருத்துவமனை! உறவினர்கள் மறியல்
மயிலாடுதுறை: வலிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியை சேர்ந்தவர் ரத்தினகுமார்-கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்களுடைய 9 மாத குழந்தைக்கு நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. குழந்தையின் நிலையை பார்த்து பதறிய பெற்றோர், உடனடியாக மயிலாடுதுறை பெரியார் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தை தூக்கிச் சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் யாரும் இருக்கவில்லை. பணியில் இருந்த செவிலியர், மருத்துவர் வர தாமதமாகும் என்று கூறியிருக்கிறார்.

பின்னர் குழந்தையை பரிசோதித்து பார்த்த அவர், குழந்தை நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லி, தனியார் மருந்தகத்தில் மருந்து வாங்கி கொடுக்க சொல்லியுள்ளார். நீண்ட நேரம் காத்திருந்தும் கூட மருத்துவர் யாரும் வராததால் குடும்பத்தினர் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற நிலையில், உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், "குழந்தைக்கு வலிப்பு வந்துவிட்டது என அவசரமாக மருத்துவமனைக்கு வந்தோம். ஆனால், மருத்துவமனையில் யாரும் இல்லை. முதல் தளத்தில் குழந்தைகள் வார்டு இருந்தது. அங்கே சென்று பார்த்தாலும் மருத்துவரை காணவில்லை. பின்னர் ஒரு நர்ஸ் வந்தது, குழந்தையை கிள்ளி பார்த்தார். குழந்தை அழுதது. எனவே குழந்தை நன்றாகத்தான் இருக்கிறது என்று சொல்லி டிஸ்சார்ஜ் செய்துக்கொள்ளுமாறு கூறினார்.
அவசரத்திற்காகதான் மருத்துவமனைக்கு வருகிறோம். ஆனால் மருத்துவர்களே இல்லை என்பது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. எனவேதான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்" என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாதது பெரும் பிரச்னையாக இருக்கிறது. மகப்பேறு பிரிவில் கடும் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதாகவும், ஆகையால் உடனடியாக கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தியும் கடந்த ஆண்டு அனைத்து துறை மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications