கணக்கெடுப்புக்கு போட்டோ எடுத்து கழிப்பறையில் ஒட்டிய மாநகராட்சி- கோவையில் புகார்
கோவை: கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை போட்டோ எடுத்து கழிப்பறைகளில் ஒட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜர்புரம் புதுவீதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் என சுமார் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள், "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதிக்கு வந்த மாநகராட்சி நிர்வாகத்தினர் கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்ற பெயரில் எங்கள் பகுதியில் உள்ள மக்களின் விபரங்களை சேகரித்ததோடு, அனைவரையும் நிற்க வைத்த போட்டோ எடுத்துச்சென்றனர்.
ஆனால் அந்த போட்டோவை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பொது கழிவறைகளில் அதை ஒட்ட வைத்து உள்ளனர். இதனால் எங்களுக்கும், எங்கள் குழந்தைகளுக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த சம்பவத்தால் எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் கணவரையே பிரிந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்.
மேலும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications