ராமமோகனராவ் சொல்வதை மக்கள் நம்பமாட்டார்கள்: இல.கணேசன் பேட்டி
வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ராமமோகன் ராவ் கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள் என இல.கணேசன் கூறியுள்ளார்.
மதுரை: தமிழக அரசின் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகன ராவ் கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள் என பாஜக எம்.பி. இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து விடிவிக்கப்பட்ட ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்தார் ராமமோகன் ராவ். பின்னர் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன் ராவ், வருமான வரித்துறை அதிகாரிகளை கடுமையாக குற்றம் சாட்டினார். துப்பாக்கி முனையில் தனது வீட்டில் சோதனை நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன் கூறுகையில், தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி நகை, பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நடத்தப்பட்டது தவறு என ராமமோகனராவ் கூறி உள்ளார். அவருக்கு அதை கூற தகுதியில்லை.
மேலும் முழுபங்கும் யாருக்கு சென்றது என அவர் சொன்னால், கருணை காட்டப்படலாம். பாவ விமோசனம் கிடைக்கும். அவர் மீது ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. அப்படி இருந்தும் அவர் எப்படி இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது வியப்புக்குரியது. தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் சொல்வது மக்களிடம் எடுபடாது. அவரது பேச்சை மக்கள் நம்பமாட்டார்கள். மேலும் இந்த சோதனையை அரசியலாக பார்க்கக்கூடாது. சோதனையை சம்பவமாகத் தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications