இன்று மகாளய அமாவாசை- லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் புனித நீராடி தர்ப்பணம்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி அக்னி தீர்த்த கடலில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினார்கள்.
ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி மகா சிவராத்திரி போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அதேபோன்று புரட்டாசி மாதத்தின் மகாளய அமாவாசை தினமான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதற்காக சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் மற்றும் ரயில்கள் மூலம் குடும்பம், குடும்பமாக ராமேஸ்வரத்திற்கு வந்தனர்.
இன்று அதிகாலை 2 மணி முதல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
அதன் பின்னர் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடினார்கள். இதற்காக கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து, புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனால் ராமேஸ்வரத்தில் இன்று, எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமே காணப்பட்டது. மகாளய அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் கோவிலில் சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைக்களுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், மேலாளர் லட்சுமிமாலா மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர்.
டி.எஸ்.பி. முத்துராமலிங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், அமுத செல்வி மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தினார்கள். மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று இரவு 8.30 மணி அளவில் சுவாமி மற்றும் அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications