நெல்லை மாநகராட்சியில் வீடுகளுக்கு பல மடங்கு வரி உயர்வு... பொது மக்கள் கடும் எதிர்ப்பு
நெல்லை மாநகராட்சியில் வீடுகளுக்கு வாங்கப்படும் வரி பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நெல்லை: நெல்லை மாநகராட்சியில் வீடுகளுக்கு வாங்கப்படும் வரி பல மடங்கு வரி உயர்ந்துள்ளது. வீடுகளில் மறு சீராய்வு என்ற முறையில் கடுமையாக வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சியை பொறுத்தவரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடியிருப்புகளுக்கு வரி விதிப்பு மாற்றி அமைக்கப்படும். இது கடந்த 10 ஆண்டுகளாக மறு பரீசிலனை செய்யப்படவில்லை. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகத் துறை புதிய வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் சதவீத அடிப்படையில் வரி விதிப்பை கைவிட்டு சதுர அடி வரி விதிப்பை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் ரூ.100 கட்டியவர்கள் வரும் ஆண்டுகளில் ரூ.1500 வரை கட்ட வேண்டிய நிலை ஏற்படும். நெல்லை மாநகராட்சியில் தற்போது வீடுகளுக்கு சென்று பில் கலெக்டர், இந்த புதிய வரி விதிப்புக்கான நோட்டீஸை வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கி வருகின்றார்.
இந்த நோட்டீஸை பார்த்த பொது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். பொதுவாக வரி விதிப்பில் திருத்தம் செய்வது உள்ளாட்சி மன்றங்கள் செயல்பாட்டில் இருக்கும்போதே நடைபெறும். தற்போது உள்ளாட்சி மன்றங்களே இல்லை. இந்த சூழலில் உள்ளாட்சி தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளை தனி அதிகாரிகளே நிர்வாகித்து வரும் வேளையில் வீடுகளுக்கு அதிக அளவில் வரியை விதித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications