அகல ரயில் பாதைப்பணிகளுக்காக 12 ஆண்டுகளாக ரயில் சேவை முடக்கம் : கோடியக்கரை மக்கள் அவதி
அகல ரயில் பாதைப்பணிக்காக 12 ஆண்டுகளாக ரயில் சேவை முடக்கப்பட்டதால் கோடியக்கரை மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாகப்பட்டிணம் : பல ஆண்டுகளாக ரயில் பாதை பணிக்காக முடக்கப்பட்ட ரயிலை இயக்க அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதால் கோடியக்கரை மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோடியக்கரையிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ரயில்பாதை இருந்து வந்தது. இங்கிருந்து மீன், கருவாடு, காய்கறிகள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

அகஸ்தியன்பள்ளியிலிருந்து உப்பு ஏற்றுமதி மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 கோடி வரை ரயில்வே துறைக்கு லாபம் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு இந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பின்பு 2006ல் ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. சிறிது மாதங்களுக்குப் பிறகு, அதுவும் நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதைதிட்டத்திற்கு பணிகள் துவங்கப்பட்டன. இப்பணிகளில் திருத்துறைப்பூண்டியிலிருந்து அகஸ்தியன்பள்ளிவரை 42 பாலப்பணிகள் மட்டும் அரை குறையாக நடைபெற்றுள்ளது. வேறு எந்த பணியும் நடைபெறவில்லை.
இந்த பட்ஜெட்டிலாவது கூடுதல் நிதிஒதுக்கி பணிகள் விரைந்து முடிக்க அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதனால் பொதுமக்களும் உப்பு உற்பத்தியாளர்களும் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த 12 ஆண்டுகளாக ரயில் சேவை இல்லாததால் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு லாரி மூலமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உப்பிற்கு விலை இல்லாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. உப்புத்தொழிலும் நசிந்து வருகிறது.
இத்தொழிலை நம்பி உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே உப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன் கருதி மத்திய அரசு தனி கவனம் எடுத்து இத்திட்டத்தை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications