போலீஸ் துரத்தியதால் பைக்கில் சென்ற வாலிபர் பலி- போலீஸ் வேனை அடித்து, உடைத்து பொதுமக்கள் சாலைமறியல்
சென்னை: சென்னையில் கே.கே நகரில் போலீசார் விரட்டியதால் வாலிபர் பலியான சம்பவத்தினைக் கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.
சென்னை கே.கே.நகர் 80 அடி சாலையில் இன்று காலை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிற்கும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றனர். உடனே போலீசார் ஜீப்பில் அவர்களை விரட்டினர். இதனால் பயந்து போன அவர்கள் ரோட்டின் நடுவில் உள்ள சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தனர்.
அப்போது ரோட்டின் தடுப்பில் அமைக்கப் பட்டிருந்த கம்பி உடைந்து நொறுங்கியது. அது விபத்தில் சிக்கிய ஒரு வாலிபரின் வயிற்றிலும், தலையிலும் குத்தி கிழித்தது. இதனால் குடல் சரிந்த நிலையில் அந்த வாலிபர் எழுந்து ரோட்டின் ஓரம் ஓடி மயங்கி விழுந்தார். காயம் அடைந்த மற்ற 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையே குடல் சரிந்து படுகாயம் அடைந்த வாலிபரை ரோட்டில் சென்றவர்கள் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.அவரது பெயர் செல்வம். விருகம்பாக்கத்தை சேர்ந்தவ இவர் பிளம்பர் பணி செய்து வந்துள்ளார். காயம் அடைந்து தப்பி ஓடிய மற்ற 2 பேரின் பெயர், விவரங்கள் தெரிய வில்லை.
தகவல் கிடைத்ததும் இறந்த செல்வத்தின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் திரண்டனர். அவர்கள் 80 அடி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மறியலை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கினார்கள்.
அங்கு நிறுத்தியிருந்த போலீஸ் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர். விபத்து நடந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications