மக்களின் தன்னெழுச்சியை மீண்டும் கொச்சைப்படுத்தும் ரஜினி.. எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது என்கிறார்
நீதிமன்றம் மூலமே மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி : நீதிமன்றம் மூலமே பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று தூத்துக்குடியில் மக்களைச் சந்திக்கச் சென்ற ரஜினிகாந்த் பேசியுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசும், காவல்துறையும் பொறுப்பேற்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட மக்களை இன்று தூத்துக்குடிக்கு நேரில் சென்று சந்தித்தார்.

பிரமை பிடித்துப் போன மக்கள்
அப்போது ரஜினிகாந்த் பேசுகையில், மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது மிகவும் மோசமான செயல். அதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் பிரமை பிடித்துப் போய் உள்ளனர். மக்கள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள் புகுந்ததே இந்தப் போராட்டத்திற்கு காரணம் . அவர்கள் அடையாளம் காணப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும்.

மிகப் பெரிய சக்தி
மக்கள் சக்திதான் மிகப்பெரிய சக்தி எனவே, அவர்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இனிமேல் தூத்துக்குடியில் மட்டுமல்ல தமிழகத்தின் எங்குமே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்ககூடாது.

ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் மனிதர்களே கிடையாது
ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்கள் மனிதர்களே கிடையாது. அவர்கள் நீதிமன்றம் போனாலும் ஆலையை இனி திறக்க அனுமதி கிடைக்காது. இனிமேல் ஆலைகளுக்கு அரசு அனுமதி வழங்கும் போது அனைத்து விதிகளையும் கவனித்து வழங்கவேண்டும்.

எல்லாவற்றுக்கும் போராடக் கூடாது
அதில் ஏதாவது தவறு ஏற்பட்டால் மக்கள் நீதிமன்றம் சென்றே அதற்கு தீர்வு காணவேண்டும். அனைத்து பிரச்னைகளுக்கும் போராட்டம் தீர்வாகாது. எல்லாவற்றிற்கும் போராடிக்கொண்டிருந்தால், தமிழகத்தின் நிலை பாதிக்கப்படும்.

உளவுத்துறைக்கு பெரும் தோல்வி
தமிழக உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி இது. அவர்கள் சரியான முறையில் தகவல் கொடுத்திருந்தால் போராட்டத்தில் அசம்பாவிதம் தடுக்கப்பட்டு இருக்கும். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசில் இருப்பவர்கள் பதவி விலகவேண்டும் என்று சொல்வது சரியானது அல்ல. அந்த அரசியலில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மக்களின் போராட்டம் தவறா
மக்கள் போராட்டங்கள் குறித்த ரஜினின் பார்வை பெரும் குழப்பமாக இருப்பதையே தூத்துக்குடி பேச்சு மீண்டும் நிரூபித்துள்ளது. எது உண்மையான போராட்டம் என்பதை அவரால் பகுத்தறிய முடியவில்லையா என்று தெரியவில்லை. அவரே கூறுகிறார் ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் மனிதர்களே கிடையாது என்று. அப்படியானால் தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் "விலங்குகளுக்கு" எதிராக மனிதர்கள் போராடுவது எந்த வகையில் தவறாக முடியும்.. இதையும் ரஜினியே விளக்கட்டும்.












Click it and Unblock the Notifications