படகுகள் மூலம் வெள்ளத்தில் காப்பாற்றப்பட்டு போக்கிடமின்றித் தவித்த மக்கள்!
சென்னை: வீடுகளைச் சூழ்ந்த வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட பின்னர், எங்கு சென்று தங்குவது எனத் தெரியாமல் மழையோடு தெருக்களில் தவித்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.
கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
மீட்புப் படையினர் வரும் வரை காத்திருக்காமல், பல இடங்களில் தன்னார்வலத் தொண்டர்களே களத்தில் இறங்கி வீடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய மக்கள்...
தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த தண்ணீரால், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உடுத்திய உடையோடு தான் பலர் வீடுகளில் இருந்து வெளியேறினர். படகுகள் மூலம் மீட்கப்பட்ட அவர்கள் வெள்ளம் வடிந்த பகுதிகளில் கொண்டு வந்து இறக்கிவிடப் பட்டனர்.

எங்கே செல்வது?
அவ்வாறு வெள்ளம் இல்லாத பகுதிகளை வந்து சேர்ந்த மக்களுக்கு, அடுத்து எங்கே செல்வது எனத் தெரியவில்லை. அரசு ஆங்காங்கே நிவாரண முகாம்களை அமைத்திருந்த போதும், அவை குறித்த தெளிவான வழிகாட்டுதல் பல இடங்களில் கிடைக்கப் பெறவில்லை.

முடங்கிய போக்குவரத்து...
சரி, உறவினர்கள் வீடுகளுக்கு அல்லது சொந்த ஊருக்குச் செல்லலாம் என்றால் கனமழையால் போக்குவரத்தும் முடங்கியிருந்தது. இதனால் மேற்கொண்டு எங்கே செல்வது எனத் தெரியாமல் குழப்பமான மனநிலையிலேயே இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

பேருந்து நிலையத்திலேயே...
பஸ்ஸைப் பிடித்தாவது, ரயிலில் ஏறியாவது வேறு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடலாம் என எண்ணி, கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றவர்கள் பேருந்து போக்குவரத்து முடங்கியதால், அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ரயில் நிலையங்களிலும்...
இதேபோல், பலர் ரயில் நிலையங்களிலும் சிக்கிக் கொண்டனர். தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததால், ரயில் சேவையும் நிறுத்தப் பட்டிருந்தது. இதனால், ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் திரளாகத் தங்கியிருந்தது.

ஹோட்டல்களில் தஞ்சம்...
விரைவில் போக்குவரத்து சீராகி விடும் என்ற நம்பிக்கையில் பலர் தற்காலிகமாக உணவகங்களிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் தஞ்சம் புகுந்தனர். ஆனால், எதிர்பார்த்தது போல், போக்குவரத்து சீராகததால், அவர்களாலும் உடனடியாக அங்கிருந்து வெளியேற இயலவில்லை. இதனால், இரவு முழுவதும் மின்சாரமும் இல்லாமல் அங்கேயே தங்கியிருந்தனர்.

அநியாய வாடகை...
மக்களின் இந்த நெருக்கடியான சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தங்கும் விடுதிகள், வழக்கத்தை விட அளவுக்கு அதிகமான கட்டணங்களை வசூலித்து, மேலும் அவர்களை கலக்கத்தில் ஆழ்த்தினர். மிகச் சாதாரண லாட்ஜூகளில் கூட நாளொன்றிற்கு வாடகையாக இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டது.
பலர் கைக்குழந்தையோடு இவ்வாறு தங்குவதற்கு ஏதாவது இடம் கிடைக்காதா என அல்லாடியதைக் கண்கூடாகவே பார்க்க முடிந்தது.

மீண்டும் வீடு...
ஏடிஎம்கள் செயல்படாத நிலையில் கையிலும் காசு இல்லாததால், எப்போது வெள்ளம் வடியும் எனக் காத்திருந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பியவர்களும் ஏராளம்.












Click it and Unblock the Notifications