சங்கரன் கோவிலில் சூறைக்காற்றுக்கு 120க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன் இலந்தைகுளம் கிராமத்தில் பயங்கர சூறாவளி காற்றுக்கு 120க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரை தூக்கி வீசப்பட்டன.
அப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. ஏராளமான மரங்கள் கீழே விழுந்தது. நூற்றுக்கும் அதிகமான வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன. சூறாவளியால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஜமீன் இலந்தை குளம் கிராமம் இருளில் மூழ்கியது.
இந்த சூறைக்காற்றுக்கு அப்பகுதியை சேர்ந்த சண்முகத்தாய் , சின்ன முத்தம்மாள், ராமாத்தாள் ,கருப்பாயி, ஆச்சியம்மாள் , ராமாத்தாள் , செல்லத்தாய் , சண்முகையா ஆகிய 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த ராமாத்தாள் என்பவர் மேல் சிகிச்சைக்காகபாளை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு நெல்லை ஆர்.டி.ஒ. பெர்மிவித்யா விரைந்து சென்று சேதமான இடங்களை பார்வையிட்டார். சூறை காற்றால் பாதிக்கப்பட்ட மக்களை சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. முத்துசெல்வி, நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரைராஜ் மற்றும் பல்வேறு கட்சியினர் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
அனைவரும் அப்பகுதியில் உள்ள சமுதாயநலக்கூடம் மற்றும் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர் களுக்கு அங்கு உணவுகள் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு நெல்லை கலெக்டர் கருணாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துக்கருப்பன் எம்.பி. ஆகியோர் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் ஜமீன் இலந்தைகுளத்தில் உள்ள பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களை தாசில்தார் சிவக்குமார் பார்வையிட்டார். அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் வண்ண கருப்பசாமியிடம் மேல நீலிதநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் முருகையா, நிவாரண நிதியாக ரூபாய்1 லட்சம் வழங்கினார்.
அப்போது அவருடன் குருக்கள்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் செல்வ ராஜ் உடனிருந்தார். சூறை காற்றினால் சாய்ந்த மின் கம்பங்களை 50 பேர் கொண்ட மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2வது நாளாக இன்றும் சமுதாயநலக்கூடம், பள்ளி யில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முன்னதாக நேற்று இரவு ஜமீன் இலந்தை குளம் கிராமத்திற்கு ஜென ரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.