திமுக, அதிமுக இல்லாத புதிய கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்: அன்புமணி ராமதாஸ்
திருவண்ணாமலை: திமுக, அதிமுக இல்லாத புதிய கட்சியை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதன்படி 2016 சட்டசபைத் தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கொங்கராம்பட்டில் கே.எம்.ஏ. திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டப உரிமையாளரும், பாமக நிர்வாகியுமான ஆ.வேலாயுதம் அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாமக இளைஞரணி மாநிலத் தலைவரும், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
மண்டபத்தைத் திறந்து வைத்தப் பின்னர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :-
தமிழகத்தின் அரசியல் சூழலில் அனைத்து தரப்பு மக்களும் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். திமுக, அதிமுக இல்லாத புதிய கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 2016 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக அரசியலில் மாற்றம் வரும். தமிழகத்தில் பாமக ஆட்சி அமைத்தால் முதல் சட்டமாக பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்றார்.
இவ்விழாவில் ரயில்வே முன்னாள் இணை அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, அரங்க.வேலு, செஞ்சி எம்எல்ஏ கணேஷ், மாநில பிரசார அணி நிர்வாகி கோ.எதிரொலி மணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் எம்.ஆறுமுகம், லட்சுமி, ஆ.சரவணராஜ், ஆ.மணிகண்டன், ஆ.கந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications