வேலையைத் திருப்பிக் கொடு.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய மக்கள் நலப் பணியாளர்கள்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தங்களுக்கு மீண்டும் வேலை அளிக்கக் கோரி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 125 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரத்து 500 மக்கள் நல பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில்இன்று ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
இதனையடுத்து நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஈர துணியை வயிற்றில் கட்டிக்கொண்டும் கைகளில் மண் சட்டி ஏந்திக்கொண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர். சிலர் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வாணக் கோலத்திலும் காட்சியளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று வடசேரி பஸ் நிலையத்திற்குள் நுழைந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் பஸ் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து மறியலிலும் ஈடு பட்டனர். இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேன்களில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications