விடுதலை ஆனதும் பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு: தந்தை குயில்தாசன்

இது குறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார். அந்த அறிவிப்பு கண்ணே இல்லாதவனுக்கு பார்வை வந்தால் எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ அது போல் உள்ளது.
நான் ஒரு கட்டத்தில் துவண்டு போய்விட்டேன். என் மகனும் இனி நமக்கு யாரும் இல்லை அதனால் நாம் தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றான்.
சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்தார்கள். ஆனால் வடமாநிலத்தில் திடீர் என்று இருவரை தூக்கிலிட்டார்கள். இதனால் என் மகனையும் தூக்கில் போட்டுவிடுவார்களோ என்று பயந்தேன். இந்நிலையில் தான் எனது மகனின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
அதன் பிறகு என்னை தொடர்பு கொண்ட வழக்கறிஞர்களும், நண்பர்களும் என் மகன் விடுதலையாக இன்னும் 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு ஆகலாம் என்றனர். இந்நிலையில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்று நேற்று அறிவித்தார். அதை நான் டி.வி.யில் பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சியை கொண்டாடியபோது முதல்வரின் அறிவிப்பு இரட்டை மகிழ்ச்சியை அளித்தது. என் மகன் நீண்டகாலம் சிறையில் இருந்துவிட்டான். அவன் விடுதலையானவுடன் அவனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.
பின்னர் குயில்தாசன் பேரறிவாளன் விடுதலையாகப் போவதை தனது மூத்த மகள் அன்புமணி, மருமகன் ராஜா மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்.












Click it and Unblock the Notifications