கண்ணீர் மல்க விடை கொடுத்த அற்புதம்மாள்... கையசைத்து விடை பெற்ற பேரறிவாளன்
இரண்டு மாத கால பரோல் முடிந்த பேரறிவாளன் இன்று வேலூர் சிறைக்கு திரும்பினார். அவருக்கு தயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க விடை கொடுத்தார்.
வேலூர்: ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க அரசு அனுமதிக்காத நிலையில் பேரறிவாளன் இன்று வேலூர் சிறைக்குத் திரும்பினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய தந்தை குயில்தாசனின் உடல்நிலை மோசமாக உள்ளதால் மருத்துவ சிகிச்சைகளின் போது பேரறிவாளன் பக்கத்தில் இருக்கும் விதமாக அவரை பரோலில் விட வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து இது தொடர்பாக அவர் அரசுக்கு மனு அளித்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென பேரறிவாளனை ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி பரோலில் விட்டது தமிழக அரசு. ஆனால் பரோல் காலத்தில் அவர் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24ம் தேதி நள்ளிரவு ஜோலார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் பேரறிவாளனின் தந்தையின் சிகிச்சையை தொடர வசதியாக பரோல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று இரண்டாவது முறையாக அற்யுதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற அரசு பரோலை மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்தது. மூன்றாவது மாதமாக இந்த முறையும் பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க அற்யுதம்மாள் மற்றும் அரசியல் கட்சியினர் அரசை வலியுறுத்தினர்.
எனினும் அரசு அனுமதி அளிக்காத நிலையில் இன்றோடு 2 மாத கால பரோல் முடிந்து பேரறிவாளன் மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். காவல் வாகனத்தில் ஏறி சிறைக்கு புறப்பட்ட பேரறிவாளனுக்கு அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். கையசத்தபடியே காவல்துறையினரின் வாகனத்தில் ஏறி சிறைக்கு புறப்பட்டார் பேரறிவாளன்.
இனி பரோல் கேட்டு விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும் மகனின் நிரந்தர விடுதலைக்காக போராடப் போவதாகவும் கூறியுள்ளார் அவரது தாயார் அற்புதம்மாள்












Click it and Unblock the Notifications