தஞ்சை அருகே பெரியார் சிலைக்கு செருப்பு மாலை.. தமிழகத்தில் தொடரும் அவலம்.. திக போராட்டம்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு அவமதிப்பு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு அருகேயுள்ள கவராப்பட்டு என்ற இடத்தில் பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இரு தினங்கள் முன்பாக பெரியார் சிலையை சேதப்படுத்திய பாஜக பிரமுகர் முத்துராமன் சிக்கினார்.
இதேபோல, சென்னையில் பெரியார் சிலை மீது செருப்பை வீசிய பாஜக வக்கீல் ஜெகதீஷனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிடித்து அடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
இதுபோன்ற அவமதிப்பு சம்பவங்களுக்கு அனைத்து கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவராப்பட்டு என்ற இடத்தில் உள்ள பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். இன்று காலை பொதுமக்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும், திராவிடர் கழக தொண்டர்கள் போராட்டம் நடத்த அங்கு குவியத் தொடங்கினர். இதையடுத்து போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சிலையை அவமதித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.