சிவசேனா -விஎச்பி நிர்வாகிகளிடையே மோதல்: குண்டு வீசித் தாக்குதல் - கோவையில் பரபரப்பு
கோவை: கோவையில், இந்து அமைப்புகளுக்கிடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் சிவசேனா அமைப்பின் நிர்வாகி வீட்டில் எதிர்த் தரப்பினர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீர்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சிவசேனா அமைப்பின் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்றிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.
குண்டு, வீட்டின் முன் பகுதியில் விழுந்து வெடித்துள்ளது. சப்தம் கேட்டு வெளியே வந்த முத்துகுமாரின் உறவினர்கள் வீட்டின் முன்பு தீ பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயை அணைத்தனர்.
ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்குத் தகவல் போனது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார், கைரேகைளைப் பதிவு செய்தனர். பெட்ரோல் குண்டின் பாகங்களையும் மீட்டனர்.
விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக முத்துக்குமாருக்கும், விஎச்பியைச் சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே சுபாஷ்தான் தனது வீட்டில் குண்டு வீசப்பட்டதற்குக் காரணம் என முத்துக்குமார் போலீஸில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுபாஷ் தலைமறைவாகி விட்டார். அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications