இப்படியே ஏறிக் கிட்டே போனா இனி "நடராஜா" சர்வீஸ்தான் போங்க
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.85.99 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.26 ஆக விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நியமித்து கொள்ளலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. இதையடுத்து கச்சா எண்ணெயின் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் 9 காசுகள் உயர்ந்து ரூ. 79.20-ஆக இருந்தது. டீசல் விலை 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ71.55 ஆக இருந்தது.
இந்நிலையில் கடந்த 50 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ஆகஸ்ட் 13-ஆம் தேதியான ஒரு நாள் மட்டுமே சற்று குறைந்தது. இடையில் 10 நாட்கள் இந்த விலை மாற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.99-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 78.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்களின் விலையும் இப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.