ஜெயலலிதாவை சிங்கப்பூர் சிகிச்சைக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்தது யார்? - பிஹெச் பாண்டியன்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிங்கப்பூர் சிகிச்சைக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்தது யார் என்று முன்னாள் சபாநாயகர் பிஹெச் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: அப்பல்லோவில் உடல் நலம் குன்றிய நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லாதது ஏன் என்று முன்னாள் சபாநாயகரும், ஓபிஎஸ் அணியின் ஆதரவாளருமான பி.ஹெச் பாண்டியன் கூறியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சிபிஐ விசாரணை கோரி வருகின்றனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிஹெச் பாண்டியன், ஜெயலலிதாவை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று கேட்டார்.
பாரா ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் சென்னைக்கு அனுப்பப்பட்டது என்றும், சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அது வந்தது என்றும் பி ஹெச் பாண்டியன் கூறியுள்ளார். ஜெயலலிதாவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லாதது ஏன் என்றும் கேட்டார்.
அதைத் தடுத்தது யார் என்பதை விளக்க வேண்டும் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை இதுவரை வெளியிடப்படாதது ஏன் என்றும் பி ஹெச் பாண்டியன் கேட்டுள்ளார்.
எதற்காக சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட்டுகள் வரவழைக்கப்பட்டனர் அவர்களைளை வரவழைத்தது யார்.. ஏன் வரவழைக்கப்பட்டனர் என்றும் பிஹெச் பாண்டியன் அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.