நாடு எங்க சார் போகுது.. பா.ரஞ்சித்தோடு போட்டோ எடுத்த சென்னை ஐஐடி மாணவருக்கு நேர்ந்த கதியை பாருங்கள்!
சென்னை: கபாலி திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்துடன் போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்ட 'குற்றத்திற்காக' சென்னை ஐஐடி மாணவர் ஒருவர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபினவ் சூர்யா என்ற அந்த மாணவர்தான், இந்த சிக்கலில் மாட்டியவர். இவர் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த செவ்வாய் கிழமை, எழும்பூரில் 'கபாலி' திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வு நடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
தலித்திய சிந்தனை கொண்ட அபினவ் சூர்யாவும் நண்பர்களுடன் கலந்துகொண்டிருக்கிறார். விழா நிறைவில் நண்பர்களுடன் சேர்ந்து, பா.ரஞ்சித்துடன், செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். அந்தப் படத்தை அன்று இரவு தனது பேஸ்புக் பக்கத்தில் முகப்புப் படமாகவும் வைத்துள்ளார்.
ஆனால், இதை பார்த்துவிட்டுதான் கமெண்ட்டில் மிகவும் கீழ்த்தரமாக கருத்துக்களை பகிர்ந்துள்ளனர், ஐஐடியின் சக மாணவர்கள் உள்ளிட்ட சிலர். நூற்றுக்கணக்காக இவ்வாறு கமெண்ட் வந்துள்ளது.
இட ஒதுக்கீட்டில் படித்து வந்தவனாகத்தான் இருக்கும்.. பன்றிக்கு வெட்டி போட வேண்டும்.. உட்பட சொல்ல முடியாத இன்னும் பல மோசமான கமெண்டுகள் அதில் நிறைந்திருந்தன.
இதுகுறித்து அபினவ் சூர்யா வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இயக்குநர் ரஞ்சித்தோடு நான் இருக்கும் புகைப்படத்தை வைத்ததால் அதற்காக கொந்தளித்துப் போய் மட்டும் இவர்கள் இப்படி வன்மத்தைக் காட்டவில்லை. கடந்த வாரத்தில் எங்கள் கல்லூரிக்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி.பாக்ஸி சுதந்திர விழா சார்பாக அழைக்கப்பட்டு இருந்தார். அந்த விழாவில் தீவிர வலதுசாரி தன்மையோடு பேசினார்.
'பாகிஸ்தானோடு சண்டையிடுங்கள்... அப்போதுதான் நம் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். எங்கள் தலைமுறையில் பாகிஸ்தானை இரண்டு ஆக்கினோம். உங்கள் தலைமுறை அதை மேலும் நான்கு ஆக்க வேண்டும். அப்போதுதான் நாம் அமைதியாக வாழ முடியும்' என்றார்.
மற்ற நாட்டு மக்களிடம் அன்பு செலுத்துங்கள் என்று பேசாவிட்டால் பரவாயில்லை. பகைமை உணர்வை வலுப்படுத்தும்படி பேசியதால், கல்லூரி நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினேன். அதைத் தொடர்ந்து மேஜர் பேச்சை ஆதரித்தவர்கள் என் மீது இப்படியான வன்மத் தாக்குதல்களைத் தொடுக்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐஐடியில் இடதுசாரி மற்றும் வலது சாரி ஆதரவு மாணவர்கள் நடுவே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. 'அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்' என்கிற பெயரில் இயங்கி வந்த அமைப்பைத் தடைசெய்யக்கோரி கடந்த ஆண்டில் வலதுசாரி அமைப்புகள் போர்க்கொடி தூக்கி நாடு முழுக்க சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications