பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை போட வேண்டும்.. ஹைகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்.. காரணம் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி சமூகத்திற்கு கேடானது என்பதால் அதனை தடை செய்ய வலியுறுத்தி சரவணன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி மே மாதம் முதல் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக இந்த நிகழ்ச்சி இருப்பதாக இந்து மக்கள் கட்சியும், பிக்பாஸ் பங்கேற்பாளர் காயத்ரியின் சேரி பிஹேவியர் பேச்சால் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்டோரின் கண்டனங்களுக்கும் ஆளானது பிக் பாஸ் நிகழ்ச்சி.

கடந்த 2 நாட்களாக இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா, சக போட்டியாளர் ஆரவை காதலிக்கிறாயா இல்லையா என்று கேட்டு அவரைத் தடவுவது, முத்தம் கேட்பது என்ற பிக் பாஸ் நிகழ்ச்சி அடல்ட்ஸ் ஒன்லி ஷோவாக மாறி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை ஹைகோர்ட்டில் சரவணன் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஆபாசமாக உடையணிந்து வருவதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி சமூகத்திற்கு கேடானது என்று தமது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications