வெள்ள நிவாரணத்தை குடும்பத் தலைவிகளிடம் கொடுக்கலாமே.. அரசுக்கு ஹைகோர்ட் யோசனை
சென்னை: வெள்ள நிவாரணத் தொகையை குடும்பத் தலைவிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘சேஞ்ச் இந்தியா' என்ற அமைப்பின் இயக்குநர் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போதையால் பாதிப்பு
இயக்குநர் நாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில், வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், நாகப்பட்டினம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்க ளிலும் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, குடிபோதையில் வலம்வரும் போதை நபர்களால் வெள்ள நிவாரணப் பணியில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 2 அல்லது 3 மாதங்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என மனு செய்தேன்.

வெள்ள நிவாரணம் பாதிப்பு
டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை ஆண்களிடம் வழங்கினால், அது மீண்டும் தமிழக அரசுக்கே வந்து சேர்ந்துவிடும். இதனால் ஆதரவின்றி தவிக்கும் மக்களுக்கு எந்தப் பிரயோஜனமும் ஏற்படாது. ‘சுனாமி பாதிப்புக்கு முன்னும் பின்னும் ஆல்கஹாலிசம்' என்ற எங்கள் ஆய்வறிக்கையின் மூலம் இதை தெளிவாக அரசுக்கும் சுட்டிக் காட்டியுள்ளோம்.

டாஸ்மாக் மூடப்படுமா?
எனவே, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் மதுபானக் கடைகளை தற்காலிகமாக மூடவும், நிவாரண நிதியை நேரடியாக குடும்பத் தலைவிகளிடம் ஒப்படைக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மதுபானக் கடைகளை மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், மனுதாரர் சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை தமிழக அரசு கவனமாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் முறையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. நிவாரண உதவிகளை அளிக்க முன்வரும் தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அரசியல் கட்சியினரால் தாக்கப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டும் என்றும் அவர் தன் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும், வெள்ள நிவாரண நிதி உதவிகள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்றும், இதற்காக அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அடங்கிய ஒரு உயர் மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரி இருந்தார்.

தமிழக அரசுக்கு அவகாசம்
இதை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், புஷ்ப சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி உதவிகள் முறையாக சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அறிவுரை வழங்கியது. இது குறித்து விரிவான பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications