பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த புரோக்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டில் இதுவரை 48 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டி முல்லைநகரை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் சந்திரசேகர். இவர் மீது திண்டுக்கல் தாலுகா, மேற்கு போலீஸ் நிலையங்களில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர், விபசார புரோக்கராக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி 2 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சந்திரசேகரை தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்பு, திண்டுக்கல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தி வந்த சந்திரசேகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் ஹரிகரனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சரவணன் மூலம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஹரிகரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திண்டுக்கல் சிறைத்துறை அலுவலரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, மதுரை மத்திய சிறைக்கு சந்திரசேகர் மாற்றம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றசம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் இணைந்து அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால், கடந்த ஆண்டுகளை விட தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 48 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications