ஓ.பி.எஸ், சசிகலா.. ஒரே நேரத்தில் பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம் - ரோத்தகி
முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பும், சசிகலாவும் ஒரே சமயத்தில் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம் என்றும் முகுல் ரோத்தகி பரிந்துரைத்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபையில் ஒரே சமயத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், சசிகலாவையும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் என்றும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி பரிந்துரைத்துள்ளார்.
ஒரு வாரத்தில் தமிழக சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவுக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி பரிந்துரைத்துள்ளார். அதன்படி, ஒரு வாரத்தில் சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம். யார் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கிறார்களோ அவர்களே ஆட்சியமைக்கலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்த ஆலோசனை ஒரு பரிந்துரைதான். இதை கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. உச்சநீதிமன்றத்தின் பொம்மை வழக்கு தீர்ப்பையொட்டி இந்த பரிந்துரையை முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். இதைத்தான் கடைசியில் ஆளுநர் கடைப்பிடித்தாக வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது. இதுதான் சட்ட ரீதியான நடைமுறையும் கூட.
மேலும் தனது பரிந்துரையில் இரு தரப்பையும் ஒன்றாக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம் என்றும் அட்டர்னி ஜெனரல் பரிந்துரைத்துள்ளார். கடந்த 90களில் உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங்கும், ஜெகதாம்பிகா பாலும் இதேபேல கூட்டாக சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடப்பட்டனர் என்ற உதாரணத்தையும் ரோத்தகி சுட்டிக் காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications