விமானத்தைக் கடத்தி ‘அம்மா’வை விடுவிக்க திட்டம் தீட்டிய ஹூசைனி... திடுக் தகவல்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என தன்னைத் தானே சிலுவையில் அறைந்து, கடந்த மாதம் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டார் கராத்தே வீரர் ஹூசைனி.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தமிழக முதல்வர் பதவியை இழந்து, மக்களின் முதல்வர் ஆனார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. ஆனால், மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் நிஜ முதல்வர் ஆக வேண்டும்' என மும்மதப் பிரார்த்தனைகளுடன் கடந்த மாதம் கராத்தே வீரர் ஹூசைனி, தன்னை சிலுவையில் அறைந்து கொண்டார்.
ஏற்கனவே, ரத்தத்தைக் கொண்டு ‘தமிழ்த்தாய்' சிலை வடித்தவர் தான் இந்த ஹூசைனி. இந்நிலையில், ஜெயலலிதாவிற்காக தனது பிரார்த்தனை குறித்து வார இதழ் ஒன்றிற்கு ஹூசைனி பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அம்மா கைது...
அம்மாவைக் கைது செய்த போது நான் மதுரையில் இருந்தேன். இதற்குக் காரணமானவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்று வெறியோடு இருந்தேன்.

விமானக் கடத்தல் திட்டம்...
விமானத்தைக் கடத்தி அவரை விடுவிக்க வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தேன். ஆனால், என் மனைவி தான் என்னை மாற்றினாள். இல்லாவிட்டால் அம்மாவின் இந்த நிலைமைக்குக் காரணமான கருணாநிதியையோ, சுப்பிரமணிய சுவாமியையோ ஏதாவது செய்திருப்பேன்.

காதைக் கொடுங்க... ரகசியம் சொல்றேன்
எனக்குள் சில கடவுள் சக்திகள் இருக்கின்றன. உங்களுக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். நான் முகம்மது நபிகளின் நேரடி வாரிசு.

உள்ளுணர்வு...
சில சமயங்களில் நடக்கப் போவதை என் உள்ளுணர்வு முன்கூட்டியே சொல்லிவிடும். எனக்கு ஒரு வித்தியாசமான நோய் வந்து இன்னும் 10 நாட்களுக்குள் என் விதி முடிந்து விடும் என்று சொல்லி விட்டார்கள்.

ஆறுதல் சொன்ன நண்பர்கள்...
அதனால் என் உறவினர்களைச் சந்திக்க மதுரை சென்றிருந்தேன். அப்போது என் நண்பர்கள் என்னைப் பார்த்து அழும்போது, கவலைப்படாதீங்கடா... உங்களுக்கு அப்புறம் தான் நான் போவேன்' என்று சமாதானம் சொல்லிவிட்டு வந்தேன். இந்தச் சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குள்ளாகவே அவர்கள் இருவரும் இறந்து விட்டார்கள். ஆனால், எனக்கு ஒன்றும் ஆகவில்லை.

லிவிங் டிரீம்ஸ்...
இதே போலத்தான் ஜனவரி 31, 2004ம் ஆண்டு நான் ஒரு பெரிய அலையால் தாக்கப்படுவது போன்று கனவு கண்டேன். அதனை என்னுடைய ‘லிவிங் டிரீம்ஸ்' என்ற குறிப்பில் வரைந்து வைத்தேன்.

சுனாமி...
அதேபோல டிசம்பர் 26, 2004ல் சுனாமி தாக்கியது. எனக்கு கராத்தே தெரிந்து இருந்ததால் என்னைத் தாக்க வந்த அலையைத் திருப்பி விட்டேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications