பிரஸ்ஸல்ஸில் மாயமான தமிழரை கண்டுபிடித்துக் கொடுங்கள்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: பிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் இருந்து மாயமாகியுள்ள சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 22ம் தேதி காலை பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதையடுத்து மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்புகளில் 34 பேர் பலியாகினர். மேலும் பெல்ஜியத்தில் பணியாற்றி வந்த சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசை காணவில்லை. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த மெட்ரோ வழித்தடம் வழியாகத் தான் அவர் தினமும் வேலைக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கணேசை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன், தன்னுடைய பெற்றோருக்கு மூத்த மகன். அவரது இளம் மனைவி குழந்தை பிறந்ததை அடுத்து தற்போது சென்னையில் இருக்கிறார்.
அவரது மொத்த குடும்பமும் ஆழ்ந்த துயரில் உள்ளது. தன்னுடைய மகனை கண்டுபிடிக்கக் கோரி என்னிடம் உதவி கோரியுள்ளனர். கணேசனை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை மூலமாகவும், பெல்ஜியத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும், கவலையில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்திற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications