"புள்ளகுட்டிகள படிக்க வைங்கப்பா"- கமல் டயலாக்கை பேசிய ரஜினி - சோஷியல் மீடியாக்கள் மீதும் பாய்ச்சல்
குடும்பத்திலும், குழந்தைகள் படிப்பிலும் கவனம் செலுத்துங்கள் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.
Recommended Video
சென்னை: ரசிகர்கள் கட்டுப்பாடு ஒழுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வெளியாகும் கொடூரமான, தவறான விஷயங்களில் கவனம் செலுத்த கூடாது என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துக்கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அரசியல் நிலைப்பாடு குறித்து 31ம் தேதி கூறுவேன் என்று கூறிய ரஜினி, மக்களை விட ஊடகங்கள் தான் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிந்துக்கொள்ள ஆர்வமுடன் இருப்பதாக கூறினார்.
சமூக வலைதளங்கள் பெருகிவிட்டது, அதில் தினந்தோறும் பல்வேறு விதமான வருந்தத்தக்க சம்பவங்கள் வெளியாகிறது. தந்தை கொலை, தாய் கொலை, குழந்தை கொலை என்று இந்த மாதிரியான விஷயங்களில் ரசிகர்கள் கவனம் செலுத்தாதீர்கள். உங்களின் மனம், எண்ணம் ஆகியவை கெட்டுப்போய் விடும்.
கட்டுப்பாடும், ஒழுக்கமும் தான் வாழ்க்கையில் மிக முக்கியம். அதனை எப்போது தவற விடாதீர்கள், குடும்பத்தை கவனியுங்கள், குழந்தைகளின் படிப்பில் அக்கறை செலுத்துங்கள் அதுதான் வாழ்க்கையில் முக்கியம். மத்ததெல்லாம் அதுக்கு அப்புறம் தான், என ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை வழங்கினார்.
அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை இன்று ரஜினி வெளியிடாத வருத்தத்தை விட, ரஜினியிடம் இன்று புகைப்படம் எடுக்க முடியாமல் போய் விடுமோ என்ற வருத்தமும் பதற்றமும் தான் அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.