மதுக்கடை ஒழிக்க தற்கொலை செய்த மாணவர் தினேஷ் பெற்ற மதிப்பெண்கள்.. கதறி அழுத மாடசாமி!
தற்கொலை செய்துகொண்ட தினேஷ் பிளஸ் 2 தேர்வில் 1,024 மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.
Recommended Video
சங்கரன்கோவில்: மதுக்கடையை மூட வலியுறுத்தி தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாணவர் தினேஷ் பிளஸ் 2 தேர்வில் 1,024 மதிப்பெண்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தினேஷ் நல்லசிவம் 17. இவர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிமுடித்து நீட் தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் தினேஷ், தனது தந்தைக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாடசாமி திருந்துவதாக தெரியவில்லை. இதனால் மனம் நொந்துபோன தினேஷ், குழப்பழக்கத்தை நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்து கடந்த 2-ந் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அந்த கடிதத்தில் மதுக்கடையைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாரத பிரதமர் மோடியும் உடனடியாக மூட வேண்டும் எனவும் இல்லையென்றால் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் என்றும் ஆதங்கப்பட்டு தெரிவித்திருந்தார். தினேஷ் மரணம் அனைத்து தரப்பினரையும் அதிர்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்துக்கு பின்னர் மாடசாமி, இனி இறந்துபோன தன் மகன் தினேஷ் மீது சத்தியமாக மது அருந்தமாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாயின. அந்த முடிவில் தினேஷ் நல்லசிவம், 1,200-க்கு 1,024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தமிழ்-194, ஆங்கிலம்-148, இயற்பியல்-186, வேதியியல்-173, உயிரியல்-129, கணிதம்-194. மகனின் இந்த மதிப்பெண்களை கேட்டதும் அதிர்ச்சியடைந்த மாடசாமி, கதறி கதறி அழுதார். இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற மகனை இழந்துவிட்டேனே என்று மனம் வெம்பி தெரிவித்தார்.