பிளஸ் 2 மாணவர்களுக்கு படிக்கும் கல்வியாண்டிலேயே லேப்டாப் - தமிழக அரசு உத்தரவு
சென்னை: பிளஸ் 2 படிக்கும் போதே மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தாலும் அவர்கள் பிளஸ்-2 படித்து முடித்த பிறகுதான் கொடுக்கப்பட்டு வந்தது.
இனி அப்படி கொடுக்காமல் அவர்கள் பிளஸ் 2 படிக்கும் போதே மடிக்கணினி கொடுக்கும் முறை இந்த வருடம் அமலுக்கு வந்துள்ளது.

விலையில்லா பொருட்கள்:
மாணவ, மாணவிகள் நலன் கருதி விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டுபுத்தகங்கள், புத்தகப்பைகள், மடிக்கணினி உள்பட 14 வகையான விலை இல்லா பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
பயனடையும் மாணவர்கள்:
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி விலை இல்லாமல் கொடுக்கும் முறை உள்ளது. உயர் கல்வி படிக்கும்போது அந்த மடிக்கணினி பயன்படுகிறது. இதனால் ஏராளமான ஏழை மாணவர்கள் பயன் அடைகிறார்கள்.
முடித்த பிறகுதான் வழங்கப்படும்:
இந்த மடிக்கணினி பிளஸ் 2 முடித்த பிறகு, அவர்கள் உயர்கல்வியில் சேர்ந்த பிறகுதான் அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களால் வழங்கப்பட்டு வந்தது.
படிக்கும்போதே மடிக்கணினி:
இந்நிலையில் அந்த மடிக்கணினி முன்கூட்டியே கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை இந்த வருடம் முதல், மடிக்கணினியை மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் பணியை நேற்று தொடங்கியது.

இந்த ஆண்டே வழங்கப்படும்:
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில், "2015-2016 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கு உரிய 5 லட்சத்து 8 ஆயிரத்து 72 மடிக்கணினிகள் கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த வருடம் மடிக்கணினிகள் அனைத்தும் வந்துவிட்டன. எனவே உடனே கொடுக்கும் பணியை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் செய்ய உள்ளனர்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications