மோடியின் பாஷன் ஃபிப்டி ப்ளான்! சமாளிக்க முடியுமா எதிர்க்கட்சிகள்?
தேர்தலுக்கு முன்பு 50 கூட்டங்களில் பேசுவதற்கு பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை: 2019 லோக்சபா தேர்தலைக் குறி வைத்து, தேர்தலுக்கு முன்னால், நாடு முழுவதும் 100 தொகுதிகளில் 50 கூட்டங்களில் உரையாற்றுவதற்கு (பாஷன்) பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத் திட்டம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன்பு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், நாடு முழுவதும், 100 லோக்சபா தொகுதிகளை இணைத்து 50 கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
அதே போல, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் ஒவ்வொருவரும் தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் 50 கூட்டங்களில் பேசுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

லோக்சபா தொகுதிகளை இணைத்து
இந்த கூட்டங்கள் எல்லாமே பாஜகவை தேர்தல் பிரச்சாரத்துக்கு தயார்படுத்துவதற்காக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு கூட்டமும் 2 அல்லது 3 மக்களவைத் தொகுதிகளை இணைக்கும்படி இருக்கும்.

பாஷன் 50
தேர்தலுக்கு முன்பு மோடி உரையாற்றவுள்ள 50 கூட்டங்களைத் தவிர, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மோடி பேச உள்ள மேலும் சில கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்பிச்சாச்சே
நேற்று பஞ்சாப் மாநிலத்தின் மாலவுட் என்ற இடத்தில் நடைபெற்ற பாஜக கூட்டமே அதில் முதல் கூட்டம். இந்த கூட்டத்தைப் போல, உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூரில் விவசாயிகளின் கூட்டம் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மோடியின் பலம்
மோடியின் மிகப்பெரிய பலமே, மக்களை அவரது ஈர்க்கும் பேச்சுதான். இதை வைத்துதான் அவரை பாஜக பிரச்சார பீரங்கியாக பார்க்கிறது. மோடி அளவுக்கு பேச்சில் பதிலடி தர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் யாரும் இல்லை என்றுதான் கூற வேண்டும். பேச்சின் மூலம் மக்களை ஈர்க்க கூடிய லாலு பிரசாத் யாதவோ வழக்குக்காக சிறையில் தள்ளப்பட்டுள்ளார். எனவே மோடியின் இந்த திட்டம் எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications