ராணுவத் தளவாடங்கள் கண்காட்சியைப் பார்வையிட ஏப்ரல் 12-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி
ராணுவத் தளவாடங்கள் கண்காட்சியைப் பார்வையிட ஏப்ரல் 12-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
சென்னை : சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடைபெற உள்ள ராணுவக் கண்காட்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதற்காக வருகிற 12ம் தேதி மோடி சென்னை வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையை அடுத்த திருவிடந்தையில் வருகிற 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ராணுவக் கண்காட்சி நடைபெறவுள்ளது. நான்கு நாள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது.
ரூபாய் 480 கோடி செலவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 60 நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. மேலும், கண்காட்சி அரங்கில் ராணுவத் தளவாடங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர்க் கப்பல்கள் உள்ளிட்டவை வைக்கப்படவுள்ளன.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்க பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக வருகிற 12ம் தேதி ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 6.40 மணிக்கு தனிவிமானத்தில் கிளம்பும் மோடி, காலை 9.20க்கு மீனம்பாக்கம் பழைய விமானநிலையம் வந்தடைகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பும் மோடி மாமல்லபுரம் சென்றடைகிறார். பிறகு அங்கிருந்து காரில் திருவிடந்தை சென்று அங்கு ராணுவக் கண்காட்சியை பார்வையிடுகிறார்.
பிறகு அங்கிருந்து 12.10 மணிக்கு அங்கிருந்து கிளம்பும் மோடி, அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நடைபெறும் வைரவிழா கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
பிறகு அங்கிருந்து பகல் 2 மணியளவில் புறப்படும் மோடி, பகல் 2.25 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு, மாலை 5.10க்கு டெல்லி போய்ச் சேருவார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.